திங்கள், 2 பிப்ரவரி, 2026

முதுகுளத்தூர் சித்திரகவி மு.தெய்வநாயகம் பிள்ளை

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பிறந்த இவர் தமிழிலக்கண இலக்கியங்களைக் கற்று சித்திரக்கவிகள் இயற்றுவதில் வல்லவராகத் திகழ்ந்துள்ளார். முதுகுளத்தூரில் அமைந்த வித்தியா சங்கத்தில் உறுப்பினராகவும், கொடைக்கானல் ஆங்கிலக் கிளப்பின் தலைமை எழுத்தாளராகவும் இருந்துள்ளார்.1908 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்க அச்சு இயந்திரச் சாலையில் பதிக்கப்பட்ட மதுரகவி சுப்பையா பிள்ளையவர்கள் இயற்றிய புவனேந்திர காவியத்திற்கு சிறப்புப் பாயிரம் பாடியுள்ளார். அவர் பாடிய நான்கு பாடல்கள் கிடைத்துள்ளன. நான்கும் வசன் வெண்பாக்கள் மூலம் அமைந்துள்ளன. அவை‘‘சேதுசமஸ்தானத்தை சேர்ந்த முதுகுளத்தூ/ ராதிக்கிராமாந்தரங்களின் வி – வாதங்/ களைத் தீர்க்காநின்ற தர்ம கர்த்தாவிருத்தங்/ களைப் பாடுவதிற்கவி,  சக்ரவர்த்தியான கம்பனுக்குச்ச மானங்கொத்/ துக்கணக்குப் பாத்ய சுபயோகி – முக்கணனை/ யேசிவன் பிர்மாவிஷ்ணு யேசும்க மூதெனு/ தாசம்ப்ர தாயச்சமா, தானநிர்மாணந்தெரிந்ததத்துவ விசாரியெனம்/ மானருமையாய்ப் பெற்றமைத்துனர்ந– வீனகற்பி/ தாலங்காரப் ரசங்கி சார்சனர்சினே கரிந்த்ர/ சாலவல்லவர் மஹாராஜ, ராஜ ஸ்ரீசுப்பையா பிள்ளையவர்கள் ராஜ/ ராஜன் புவனேந்த்ரராஜனது– வீசுபுகழ்/ பெற்றகதையைப் பரந்தமாயி யற்றினார்களைக்/கற்றவர்கண்ணென்று சொன்னார்கள்’’எனும் பாடல்கள் மூலம் அறியலாம். (புவனேந்திர காவியம், பக்.1,2)            மேற்சுட்டியுள்ள நான்கு பாடல்களையும் வெண்பாவாகப் பாடுவதோடு உரைநடையாகவும் ஒன்றாகச் சேர்த்துப் படிக்கலாம். செய்யுள் இயற்றுவதில் இதுவும் புதுமையான ஒரு வகை. இவரைப் போன்று மாம்பழக் கவிச்சிங்க நாவலர் முதலிய வேறு அறிஞர்களும் உரைநடைக் கவிதை செய்திருக்கின்றார்கள்.            வெண்ணீர்வாய்க்கால் சைவசமயச் செல்வர் வேதாந்தச் செம்மல் பண்டித சோதிட வித்துவக் கலாநிதி அருட்புலவர் கா.கூ.வேலாயுதம் அவர்கள் இயற்றிய  ‘திருப்பாடல் திரட்டு’ என்னும் நூலிற்கு (1910) சாற்றுக்கவி ஒன்று பாடியுள்ளார். அதனை,‘‘வெண்ணிநகர் வாழாயுள் வேதமுணர் கூத்தனவேள்/ பண்ணுந் தவத்துதித்த பாக்கியவான் – கண்ணுதன்மேல்/ உள்ளன்பால் வேலா யுதமுரைத்தான் அதன்கொடுமூர்/ தெள்ளுதமிழ்ப் பாபலபாத் தேன்’’எனும் அடிகளில் சாற்றுக்கவிப் பாடியுள்ளார் என்பதை அறியலாம். (திருப்பாடல் திரட்டு, ப.10)    சித்திரகவி இயற்றியவதில் வல்லவராகத் திகழ்ந்த மு.தெய்வநாயகம்பிள்ளை பிறந்த ஊரான முதுகுளத்தூரில் புலவர்கள் கூடி ஒன்றிணையும் சங்கமாக வித்தியா சங்கம் செயல்பட்டு வந்துள்ளது என்னும் செய்தியை அறிய முடிகிறது.

----- 
முனைவர் சே.முனியசாமி உதவிப்பேராசிரியர்மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக