இறையடியான்
கன்னட மொழிபெயர்ப்பாளர் & எழுத்தாளர்
(சாகித்ய அகாதெமி விருதுபெற்றவர்)
(04.06.2022- 18.06.2022)
கன்னடத்திலிருந்து தமிழிற்கு மொழிபெயர்க்கக் கூடிய மொழிபெயர்ப்பாளர்கள் சிலரே. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் இறையடியான்.
கர்நாடக மாநிலம் சிக்க நரசப்பா-புட்ட நரசம்மா என்பவர்களுக்கு மூன்றாவது மகனாக 04.06.1940 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தாய்மொழி கன்னடமாயிருந்தாலும் தமிழ்மொழிக் கல்வி கற்க இவரது பெற்றோர் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். தெய்வதாசன் எனும் தனது பெயரில் வடமொழி கலப்பிருந்ததால் இறையடியான் எனத் தூயத்தமிழில் மாற்றிக்கொண்டார்.
பெங்களூரில் வசிக்கும் ஏழைக் குழந்தைகளின் கல்வி மீது அக்கறை வைத்து, நூலகம் ஒன்றை ஏற்படுத்தி மாலை நேர பாடவகுப்பினை எடுத்து வந்துள்ளார். இவர் சிறந்த கால்பந்தாட்ட வீரர். பழைய ஒலிம்பிக் வீரரான கெம்பண்ணாவிடம் எதிரணியில் விளையாடியுள்ளார். இவர் யோகா ஆசிரியராக இருந்துள்ளார். நோய்நொடி எனும் நூலை எழுதியுள்ளார். சிறந்த சமூகப் பணியாளராகவும் விளங்கியுள்ளார்.
கன்னடத்திலிருந்து தமிழிற்கு முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார். மூன்று பிள்ளைகள் இருப்பினும் பெங்களூரில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்த இவர், தனது கடைசி காலம்வரை மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
2001 ஆம் ஆண்டு இறையடியான் மொழிபெயர்த்த ‘சர்வக்ஞர் உரைப்பா’ எனும் நூலினை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது. இந்நூலை வைத்து, ‘திருக்குறளும் சர்வக்ஞர் வசனங்களும்’ எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை முடித்தேன்.
இவரைப் பற்றியும் இவரது மொழிபெயர்ப்பு பற்றியும் 2016 ஆம் ஆண்டு கலைஞன் பதிப்பகத்தில் ‘இறையடியானின் வாழ்வும் பணியும்’ எனும் தலைப்பில் நூல் எழுதினேன். இரண்டு முறை பெங்களூரிலுள்ள இவரது இல்லத்திற்குச் சென்று ஆய்வுத் தொடர்பான செய்திகளைக் கேட்டறிந்தேன். எனது முனைவர் பட்ட பொதுவாய்மொழித் தேர்விற்கு வரவேண்டும் எனப் பணித்த போது, தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்தார். அன்று இரவு தங்கி காலையில் புகைவண்டியில் ஏற்றிவிடும் வரை ஐயா உடன் இருந்தேன்.
திடீரென்று கைப்பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரிப்பார். நான் விரைவில் அரசுப் பணிக்குச் செல்ல வேண்டுமென்ற ஆசை அவருக்கு இருந்தது. கடைசியாக ‘அகிலப் பேரொளி’ எனும் மொழிபெயர்ப்பு நூலினை எனக்கு அனுப்பி வைத்தார். பல்வேறு நூல்களை மொழிபெயர்த்தாலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாதவர். மிகவும் எளிமையானவர். பழகுவதற்கு அன்பானவர்.
அறிவுமதியின் நட்புக் காலம் எனும் கவிதை நூல் கன்னடத்திற்கு மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார். ஆனால் இன்னும் அச்சிடப்படவில்லை எனத் தெரிவித்தார். அதேபோல் ‘கருநாடக நாட்டுப்புறவியல்’ எனும் நூல் எழுதி வெளிவந்த போது, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஆறு.இராமநாதன் அவர்கள் பாராட்டினார் எனவும் நேர்காணலில் தெரிவித்தார்.
அடுத்து என்ன பணி செய்து கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, 1000 பக்கங்களுக்கு கூடுதலாக உள்ள ஒரு நூலினை மொழிபெயர்த்து வருகிறேன் எனக் கூறினார். அதற்குள் அவரது இறப்புச் செய்திதான் காதிற்கு எட்டியது. தனது 82 ஆம் அகவையிலும் ஓய்வில்லாதப் பணியை மேற்கொண்டு, இவ்வுலகை விட்டு மறைந்த ஐயா அவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச்சிறந்த ஒரு மொழிபெயர்ப்பாளரை இழந்து விட்டோம்.